வவுனியாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு : காரணம் என்ன?

353


வவுனியா பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி இ.போ.ச பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக தடுத்து வைத்த சம்பவம் நேற்று (10.07.2018) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தினை வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இதன் போது பேரூந்திலிருந்து 1கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



அதனையடுத்து நொச்சிமோட்டையிலிருந்து பேரூந்தில் எவ்வித பயணிகளையும் ஏற்றாமலும் இறக்காமலும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பேரூந்தினை எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தின் வாயிலை மூடி பேரூந்தில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட அனைவரையும் சோதனைக்குபடுத்தியுள்ளனர்.

இரவு 9 மணியளவில் பேரூந்தினை பொலிஸ் நிலையத்தினுள் எடுத்து சென்றதுடன் இரவு 10 வரை சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக பயணிகள் எவரையும் வெளிச்செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பயணிகள் உறவினர்கள் ஒன்றுகூடியதினால் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சற்று பதற்றநிலை காணப்பட்டது.



இரவு உணவின்றி மாணவர்கள் தவித்துடன் அவர்களை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.



இவ்வாறான பொலிஸாரின் செயற்பாட்டினால் நொச்சிமோட்டையிலிருந்து வவுனியா வரை உள்ள பகுதிகளில் இறக்க வேண்டிய பயணிகள் வீடு செல்ல பேரூந்து இல்லாமல் சிரமப்பட்டனர்.


இதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு வாயில் காவலில் நின்ற பொலிஸாரினால் பொலிஸ் நிலையத்தினுள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் வெளியில் நின்று புகைப்படம் எடுத்த சமயத்தில் பொலிஸாரினால் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.