வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை வீட்டிற்கு வந்தால் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று கணவன் அச்சுறுத்தியுள்ளார்.
கணவனின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்வையிடுவதற்கு இன்று காலை சென்ற போதே கணவன் கத்தியைக்காட்டி மிரட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வவுனியா சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் கணவன் மனைவிக்கிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் கணவன் மனைவி மீது தாக்கியதில் மூக்கில் காயம் ஏற்பட்டு மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை மனைவியை பார்வையிடுவதற்கு வைத்தியசாலைக்குச் சென்ற கணவன் தனது இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியைக்காட்டி வீட்டிற்கு வந்தால் கொன்றுவிடுவதாக பயமுறுத்தியுள்ளார்.
இதையடுத்து மனைவி அச்சம் காரணமாக இத்தகவலை வெளியில் எவரிடமும் தெரிவிக்கவில்லை எனினும் தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் அவரைப்பார்வையிடச் சென்ற உறவினர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
உறவினர்களினால் இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் பக்கச்சார்பின்றி விசாரணை நடாத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை அச்சுறுத்திய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மதுபோதையில் குறித்த நபர் சிதம்பரபுரம் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு சிறைச்சாலைக்குச் சென்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.