ஒரு மாதத்தில் திருமணம்… இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞர்!!

312

தமிழகத்தின் பழநியில் ஒருதலைக்காதலால் ஓடும் ஆட்டோவில் கழுத்து அறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது அண்ணன் முறையுள்ள இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த பகவதி என்பவரின் மகள் பவித்ரா(24).

தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். நேற்று முன்தினம் இரவு ரயில்வே பீடர் சாலையில் இருந்து ஆட்டோவில் ஒரு இளைஞருடன் சென்றுள்ளர்.

பழைய அடிவாரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, உடன் வந்த இளைஞர் பவித்ராவின் கழுத்தை அறுத்து விட்டு, ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பவித்ராவை அந்த ஆட்டோ ஓட்டுநர், பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பழநி அடிவாரம் பொலிசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பவித்ராவின் கழுத்தை அறுத்த இளைஞர், பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி மாயவன் (26), உறவு முறையில் பவித்ராவுக்கு அண்ணன் என தெரியவந்தது.

மாயவன் ஒருதலையாக பவித்ராவை காதலித்துள்ளார். அண்ணன் முறை என்பதால் அவரது காதலை பவித்ரா ஏற்க மறுத்துள்ளார். மேலும், இவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்டு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மாயவன், பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தலைமறைவாக இருந்த மாயவனை பழநி அடிவாரம் பொலிசார் நேற்று மாலை கைது செய்தனர்.