வவுனியாவில் கடும் வறட்சி : பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்!!

422

வவுனியா பிரதேச செயலகத்தினால் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது,

தற்போது வவுனியா பிரதேசத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெளுக்குளம் பகுதிக்கு பிரதேச செயலகம் மற்றும் தமிழ் தெற்கு பிரதேச சபையின் உதவிகளுடன் தண்ணீர் தொட்டிகள் அப்பகுதிகளில் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றன.

மகாறம்பைக்குளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம் போன்ற பகுதிகளிலும் குடிநீருக்குத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இப்பகுதிகளுக்கும் குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் மழை இன்மை காரணமாக இப்பகுதிகளிலுள்ள குளங்கள், கிணறுகளில் தண்ணீரின் மட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மழை இன்மையால் மேலும் பல பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதாக மேலும் தெரிவித்துள்ளார்.