வவுனியாவில் மீன் வியாபாரியின் காணாமல் போன பணத்தை கண்டுபிடித்து கொடுத்த பொலிஸார்!!

462

புத்தளத்திலிருந்து முல்லைத்தீவிற்கு வியாபாரம் செய்ய வந்த மீன் வியாபாரியின் 35,640 ரூபாய் பணம் வவுனியாவில் காணாமல் போயுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், அந்த பணத்தை கடமை முடிந்து சென்ற போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் கண்டெடுத்து போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.

பணம் தவறவிட்ட குறித்த மீன் வியாபாரியை போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து தவறவிடப்பட்ட பணத்தினை வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் செல்வபுரம் பகுதியிலிருந்து முல்லைத்தீவிற்குச் சென்று அங்கிருந்து மீன் வியாபார நடவடிக்கை மேற்கொண்டு வரும் நபர் ஒருவர் நேற்று இரவு வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

வழிபாடு முடிந்தவுடன் பணப்பையை வாகனத்தின் முன் டாஸ்போட்டில் வைத்து விட்டு மறந்து சென்றுள்ளார்.

பின்னர் பணப்பையைத் தேடியலைந்த போதிலும் பணப்பை கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார்.

இன்று காலை பணத்தை தவறவிட்ட மீன் வியாபாரிக்கு வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸார் வியாபாரியிடம் பணப்பை வழங்கியுள்ளார். மேலும், பொறுப்பதிகாரி தலைமையில் போக்குவரத்து உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.திஸாநாயக்க மற்றும் இரவுக் கடமையிலிருந்து பணப்பையினை ஒப்படைத்த திசாநாயக்க (41869), அஜித்குமார் (45213) ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மீன் வியாபாரி நன்றி தெரிவித்துள்ளார்.