வவுனியாவில் 3 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது!!

715


யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ் பிராந்திய போதை ஒழிப்பு பிரிவினரால் வவுனியாவில் இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 3கிலோ 900கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,



கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் யாழ் பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது வவுனியாவில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இளைஞர் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து யாழ்ப்பாணப்பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினரால் நேற்று இரவு 7 மணியளவில் வவுனியா கூமாங்குளம் பகுதி வீடு ஒன்றில் சோதனை நடாத்தியபோது 3கிலோ 900கிராம் கேரளா கஞ்சாவுடன் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட இளைஞர் கேரள கஞ்சாவுடன் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.