தாமரைத் தடாகத்தில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

277


மட்டக்களப்பு – மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு – திருச்செந்தூரைச் சேர்ந்த 7 வயதுடைய அனுரஞ்சித் அனுசிரா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.



மயிலம்பாவெளி – காமாட்சி கிராமத்தில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக கையளிப்பதற்காக வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் 13ஆம் திகதி வருகை தரவுள்ளார்.

இந்த வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியில் தாமரைத் தடாகம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தடாகம் அமைக்கப்படும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.



தடாகத்தினுள் குழந்தை மிதப்பதை கண்ட அயலவர்கள் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.



சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.