வவுனியாவில் சிகிச்சைக்காக பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பிச் செலுத்த சிரமப்படும் பெண்!!

610

வவுனியா – கோவில்குளம் பகுதியில் நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக் கொண்ட கடன் பணத்தை திருப்பி செலுத்துவதற்கு வீதியில் தயிர் கடை ஒன்றினை வைத்து நடத்தி வருவதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

நுண்கடனை செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்ட போது நுண்நிதி நிறுவனப் பணியாளர்கள் கடும் வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து வருவதாகவும், தனது மகளுக்கு பால்மா வாங்குவதற்கு வாரம் ஒன்றிற்கு 650 ரூபா வீதம் ஒரு மாதத்திற்கு பெரும் தொகைப்பணம் தேவையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இவ் விடயம் தொடர்பாக மேலும் குறித்த பெண் கருத்து தெரிவிக்கையில், தயிர்க்கடையை நடத்தி நுண் நிதிக்கடனைச் செலுத்துவதா? அல்லது எனது மகளுக்கு பால்மா வாங்குவதா? என்ற கேள்வி எழுப்பியதுடன், நுண்நிதிக்கடன் சுமையிலிருந்து தனது குடும்பத்தை மீட்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

எனக்கு சுகயீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது எனது கணவரிடம் வந்து பெற்று கொண்ட பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி வந்துள்ளார்கள்.

நான் வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போது எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு பெரும் தொகை பணம் தேவைப்பட்டுள்ளது. பல நெருக்கடி நிலையை சந்தித்து எனது கணவர் என்னை பார்த்து வந்தார்.

இன்று வரையில் நாங்கள் வாடகை வீட்டிலேயே இருந்து வருகின்றோம், எனக்கு சொந்தமாக காணி வேண்டி பல இடங்களுக்கு அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லை.

எனக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் இப்பவும் அதனை அனுபவித்து வருகின்றேன். எனது உடலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழாய் பொருத்தப்பட்டுள்ளதால் நீண்ட நேரம் பேசவோ வேலை செய்யவோ முடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் எனது பிள்ளைக்கு தாய்ப்பால் வழங்க முடியவில்லை, இதனால் மாதம் ஒன்றிற்கு நான்கு பால்மா பைக்கற்களை வாங்க வேண்டியுள்ளது. ஒரு பால்மா பைக்கற் 650 ரூபா. மாதம் ஒன்றிற்கு பெரும் தொகைப்பணம் தேவைப்படுகின்றது.

எனது வருமானமோ எனது கணவரின் வருமானமோ போதாமையுள்ளது, இன்னும் ஒரு பிள்ளைக்கும் சாப்பாடு வழங்க வேண்டும்.

வீட்டுச் செலவுகளையும் பார்த்துக் கொண்டு நுண்நிதி நிறுவனத்தின் கடன் பணத்தையும் செலுத்துவதற்கு பெரும் சிரமமாகவே உள்ளது. இதனாலேயே வீதியில் தயிர்க்கடை வைத்து நடத்தி வருகின்றேன்.

எனது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. என்னால் பெற்றுக் கொள்ளப்பட்ட நுண்கடனை எனது வைத்திய செலவுக்கே வழங்கியுள்ளேன்.

வைத்தியசாலை செலவுகளுக்கு நுண்கடனை பெற்றுக் கொண்டதால் என்னால் அதனைச் திருப்பி செலுத்த முடியவில்லை.

எனது கணவரின் வருமானமும் தொழிலும் போதாமையுள்ளதுடன் சரியாக அமைய வில்லை எனவும் குறிப்பிட்டார்.

கடன் பணம் செலுத்த வில்லை என்றதும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வாடி, போடி என்று தகாத வார்த்தைகளை வயது வேறுபாடுகளின்றி பிரயோகித்து வருகின்றார்கள்.

பணத்தை கொண்டு போய் உண்டியலில் போடு என்றும் நுண்நிதி நிறுவன பணியாளர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலும் பணத்தை கட்டுவதாகவும் கால அவகாசத்தையுமே கோரி வருகின்றோம்.

மேலும் மரியாதை குறைவாகவும் மனம் நோகும் படியாகவும் வயது வேறுபாடின்றி தரக்குறைவான வார்த்தையை பேசியதால் கடன் பணத்தைச் செலுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளேன்.

ஆனால் தற்போதும் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகின்றார்கள், இதனால் நிம்மதியற்ற நிலையில் இருக்கின்றோம்.

இதற்கு மேலதிகாரிகள் ஒரு நடவடிக்கையினை மேற்கொள்ள முன் வருமாறும் இக் கடன் சுமையில் இருந்து எமக்கு நிம்மதியை பெற்றுத் தருமாறும் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-