இப்படியும் ஒரு சிறுமியா : அறுவை சிகிச்சை பணத்தின் ஒரு பகுதியை கொடுத்த மனதை உருக வைக்கும் செயல்!!

375

கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் பலியாகியுள்ளனர்.

வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் கேரளாவுக்கு பணம், உணவுபொருள்கள், உடைகள் என்று இந்தியாவே வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தனது இதய ஆபரேஷனுக்காக சமூக வலைதளங்கள் மூலம் திரட்டிய பணத்தில் 5000-ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்திற்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி அட்சயா என்பர் கொடுத்துள்ளார்.

தமிழகத்தின் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கும் குமரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணியன் – ஜோதிமணி.

இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் அட்சயா என்ற மகள் உள்ளார். தயத்தில் பிரச்னையோடு இருந்த அட்சயாவுக்கு, அறுவை சிகிச்சை செய்ய வழியில்லாமல் அவரது பெற்றோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.

கடந்த வருடம் இவரது நிலைமை மோசமானதால், உடனே அறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது கரூரைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி உதவியிருக்கிறார்.

அவர் சமூக வலைத்தளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு மூன்றரை லட்சம் செலவு செய்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வைத்திருக்கிறார்.

மீண்டும் ஒரு வருடத்திற்குள் இன்னொரு அறுவை சிகிச்சை செய்யனும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு இரண்டரை லட்சம் வரை ஆகும் என்று கூறப்பட்டதால், மீண்டும் சாதிக் அலி நிதி திரட்டத் தொடங்கி இருக்கிறார்.

இதுவரை 20,000 வரை கிடைத்திருக்கிறது. கேரள வெள்ளப்பாதிப்பையும்,அங்கு மக்கள் பரிதவிப்பதையும் பார்த்து மனம் உறுகிய அட்சயா, தனக்கு சிகிச்சை செய்வதற்காகக் கிடைத்த நன்கொடைப் பணமான 20,000 ரூபாயில் இருந்து 5000-த்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார்.

மக்கள் பாதை என்ற அமைப்பு மூலம் இந்தத் தொகை கேரளாவிற்கு அனுப்பப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.