ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் : சாதித்துக் காட்டிய தமிழக விவசாயி மகன்!!

503

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில், தடை தாண்டுதல் ஓட்டம் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயின் மகன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்தோனேஷியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தருண்(21) கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தருண், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தர் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் அய்யாசாமி-பூங்கொடி. விவசாயியான அய்யாசாமி, தருண் 4ஆம் வகுப்பு படிக்கும்போதே இறந்துவிட்டார்.

தருணின் தாயார் பூங்கொடி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தருணுக்கு சத்யா(19) என்கிற தங்கை உள்ளார். இந்நிலையில், தனது விடாமுயற்சியால் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து தருண் கூறுகையில்,

‘எனக்கு 8 வயதாக இருக்கும்போது தந்தை இறந்துவிட்டார். தாயார் எனக்காக நிறைய தியாகம் செய்து இருக்கிறார். அவருக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

தற்போது அவர் ஆசிரியையாக வேலை பார்த்து மாதத்துக்கு ரூ.14 ஆயிரம் தான் சம்பாதித்து வருகிறார். எனது தாயாருக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். சிறந்த திறனை வெளிப்படுத்தி பதக்கம் வென்றதன் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

என்னுடைய போட்டியாளர்கள் பற்றி சிந்திக்காமல் எனது ஓட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எனது தேசிய சாதனை நேரத்தை விட சிறப்பான நேரத்தில் பந்தயத்தை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த 6 மாதங்களாக போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தருணின் தாயார் பூங்கொடி கூறுகையில், ‘தருண் விடா முயற்சியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டான். எங்களை சந்திக்க வருவதை கூட குறைத்துக் கொண்டு பயிற்சி மேற்கொண்டான்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கு செல்லும் முன் தங்கம் எப்படியும் வென்று விடுவேன் என்று உறுதியாக கூறி சென்றான். 400 மீற்றர் தடை தாண்டுதல் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதும் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.

தருணின் தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றி இது. எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்த என்னிடம் வாழ்த்து கூறிய போது மிகவும் சந்தோஷமாக இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

தருண் இதற்கு முன்பு தெற்காசிய போட்டிகளில் கலந்து கொண்டு 400 மீற்றர் ஓட்டம் மற்றும் 400 மீற்றர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.