50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து நபர் ஒருவரை காப்பாற்றிய நாய்!!

348


அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த நபர் ஒருவரை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர்(42). இவர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.



சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய அவரது வீட்டிற்குள் ஹார்னர் நுழைந்தபோது, வீட்டின் முன்பு இருந்த ‘லூசி’ என்ற நாயை அவர் சுட்டுக் கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை ஹார்னர் மறுத்த நிலையில் அவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.



அதனைத் தொடர்ந்து, ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு ஹார்னருக்கு உதவியது. இந்நிலையில், ஹார்னர் கொன்றதாக கூறப்பட்ட நாய் வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது.



அதன் பின்னர் அந்த நாயும், அதன் புது எஜமானரும் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டதால், ஹார்னர் 50 ஆண்டு கால சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.