மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்ய முயற்சித்த கணவன் கைது!!

570


ஹோமாகமை – அத்துருகிரிய வீதியின் 3ஆவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை கொலை செய்து விட்டு, வீட்டுக்கு எதிரில் வீதியிலுள்ள ஈரப்பலா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபரை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.



இந்த நபர் நேற்று ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தவறான தொடர்புகள் சம்பந்தமான பிரச்சினையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



வாக்குவாதம் முற்றியதன் காரணமாக கணவன், மனைவியின் கழுத்தை வயர் ஒன்றினால் இறுக்கியுள்ளார்.



பின்னர் உலக்கையால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். இதன் பின்னர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கணவன் மற்றும் மனைவி ஆகியோர் தமக்கு இருந்து வந்த தவறான தொடர்புகள் குறித்து மாறி மாறி, ஹோமாகமை பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே சில முறைப்பாடுகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

30 வயதான சச்சினி மதுவந்தி ஜயகொடி என்ற பெண்ணே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவர் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும், ஹோமாகமை பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் எழுதுவிளைஞராக தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


மனைவியை கொலை செய்த 32 வயதான நபர் இராணுவத்தில் சிவில் ஊழியராக கடமையாற்றி வருபவர் எனவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த போது, பிரதேசவாசிகள் கயிற்றை அறுத்து காப்பாற்றியுள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹோமாகமை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.