வவுனியாவில் இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் முறுகல் : பயணிகள் அவதி!!

317


வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக இ.போ.சபை – தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று செல்லும் பயணிகள் நீண்டநேரம் பொலிஸ் நிலையத்தில் காவல் நின்று அவதிக்குள்ளாகினர்.

இன்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,



யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இ.போ.சபை பேரூந்து வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக தரிந்து நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டிருந்த போது தனியார் பேரூந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் குறித்த இ.போ.சபை பேரூந்தை நிறுத்தியமை மற்றும் குறித்த நேரத்துக்கு முன்னதாக இ.போ.சபை பேரூந்து வருகை தந்து தரித்து நின்றதாக தெரிவித்து முரண்பட்டனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து அக்கரைப்பற்று செல்வதற்கு தயாராகவிருந்த குறித்த சாரதியின் தனியார் பேரூந்தை இ.போ.சபை பேரூந்துக்கு முன்னால் சென்று பயணிகளை ஏற்றும் வகையில் நிறுத்தினர். இதன்போது இரு பேரூந்துகளும் முட்டிக் கொண்டதில் தனியார் பேரூந்தின் பக்க கண்ணாடி உடைந்ததுடன், சாரதி நடத்தினர்களுக்கிடையில் கைகலப்பும் ஏற்பட்டிருந்தது.



இச்சம்பவத்தில் காயமடைந்த இ.போ.சபை பேரூந்து நடத்துனர் எஸ்.தயாபரன் (வயது 28) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு பேரூந்துகளையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்துள்ளனர்.