வவுனியாவில் நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாட்டால் வீதியில் பயணிக்க முடியாமல் மக்கள் அவதி!!

766

வவுனியாவிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் குழாய் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. எனினும் வவுனியா பூந்தோட்டம் செல்லும் வீதியிலுள்ள சந்திப்பகுதிக்கு அண்மையில் திருத்தப்பணிக்காக மண் வெட்டப்பட்டு வீதியில் போடப்பட்டு கடந்த ஒருமாதகாலமாக மூடப்படவில்லை.

இதனால் அவ்வீதியில் பயணிப்பதில் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து பூந்தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் குழாய் பொருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றதுடன் அப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

எனினும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளும் வவுனியா குடியிருப்பு பிரதான சந்திப்பகுதிக்கு அண்மையில் வெட்டப்பட்ட வீதியில் குழாய் பொருத்தப்பட்டுள்ளபோதிலும் அதை மூடிவிடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் இன்று வரையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் இரவு வேளையில் அவ்வீதியில் பயணம் மேற்கொள்ளும் போது பலர் விபத்துக்களை எதிர்நோக்கிவருகின்றனர். அப்பகுதியிலுள்ள குறித்த பகுதியை மூடி பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத்திணைக்களத்திடம் பலர் கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் முச்சக்கரவண்டிச்சாரதிகள், பயணிகள், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.