யாழ் மேலதிக அரச அதிபருடன் இடமாற்றம் தொடர்பில் முறுகல்! அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை!

717

மாந்தை கிழக்கு பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்று கடந்த 2012ம் ஆண்டு தொடங்கி கடமையாற்றி 32 வயதான இளைஞரான கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். குறித்த பிரதேசசெயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக குறித்த பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு குறித்த பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை. இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ் மேலதிக செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் அவரது முறைப்பாட்டை பொருட்படுத்தாது சுகுனவதி கஜனை மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இடத்திலேயே கஜன் தான் கொண்டு வந்திருந்த நஞ்சை அருந்தி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கஜனின் மரணத்துக்கு முற்றுமுழுதாக யாழ் மேலதிக அரசஅதிபர் சுகுனவதியும் மாந்தை கிழக்கு பிரதேசசெயலாளருமே காரணம் என கஜனின் பெற்றோர் கருதுகின்றனர். இதே வேளை கஜனைப் போல மேலும் பலர் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருவதாகவும தெரியவருகின்றது. கஜனின் மரணத்தையடுத்து குறித்த பட்டதாரிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளதுடன் தக்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் அறியவருகின்றது.

பொறுப்பானவர்களின் அதிகாரத் திமிரால் அநியாயமாக இளம் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது கடும் வேதனையளிப்பதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

நன்றி page Tamil