தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்த சாமியார் : அதிர்ச்சி சம்பவம்!!

418

புதுச்சேரியில் தோஷம் கழிப்பதாக கூறி கர்ப்பிணி பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அசோக் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி (27). இந்த தம்பதியினருக்கு ஜெயஸ்ரீ (3) என்ற பெண் குழந்தையும், ஜெயகணேஷ் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 19-ம் திகதியன்று கோவிலுக்கு செல்வதாக கூறிய கிருஷ்ணவேணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அசோக், உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை தேடியுள்ளார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிருஷ்ணவேணி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கோவிந்தராஜ் என்ற போலி சாமியாரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்துவந்த கிருஷ்ணவேணியின் தங்கைக்கு தோஷம் இருப்பதாக கூறி பூஜை ஒன்றினை கோவிந்தராஜ் நடத்தியுள்ளார். அதிஷ்டவசமாக அந்த பெண்ணிற்கும் உடனே திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் அசோக் வீட்டில் பில்லி, சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, கோவிந்தராஜ் புதைத்துப் பின் எடுத்தும் இருக்கிறார். இத்தகைய சம்பவங்களால் அசோக் குடும்பத்தினர் கண்மூடித்தனமாக கோவிந்தராஜை நம்ப ஆரம்பித்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோவிந்தராஜ், உனக்கு தோஷம் கழிக்க வேண்டும். இல்லை என்றால் உன்னுடைய கணவர் உன்னை விட்டு ஓடிவிடுவார் என கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அவர், கோவிந்தராஜ் பேச்சை கேட்டு வீட்டில் பொய் சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத காளி கோவிலுக்கு அழைத்து சென்ற கோவிந்தராஜ், கிருஷ்ணவேணியின் கண்களை மூட சொல்லி கைகளை கட்டியுள்ளார்.

பின்னர் கடவுளை மனதில் நினைக்குமாறு கூறிக்கொண்டே கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் பீறிட்டு வெளியேற சம்பவ இடத்திலேயே கிருஷ்ணவேணி துடிதுடித்து இறந்துள்ளார். இதனையடுத்து அவருடைய நகைகளை எல்லாம் சுருட்டி கொண்டு ஒன்றுமே தெரியாதவரை போல வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அங்கு அசோக்குடன் சேர்ந்து கொலை செய்த கிருஷ்ணவேணியை தேடுவதை போல நடித்துள்ளார்.