பெண் தபால் ஊழியருக்கு வந்த மர்ம பார்சல் : திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

448

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண் தபால் ஊழியருக்கு வந்த பார்சலில் பாம்பு ஒன்றும், மிரட்டல் கடிதமும் இருந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வர்க்கலையைச் சேர்ந்தவர் அணிலா(60). இவர் தபால் அலுவலகத்தில் பணியாற்றினார். சமீபத்தில் இவர் ஓய்வு பெற்ற நிலையில், நேற்றைய தினம் பார்சல் ஒன்று இவருக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தபால் ஊழியர்கள் அணிலாவுக்கு தகவல் கொடுத்ததால், அலுவலகத்திற்கு சென்று பார்சலை அவர் பெற்றுக்கொண்டார். ஆனால், அந்த பார்சல் பிளாஸ்டிக் கவரால் உறுதியாக சுற்றப்பட்டிருந்ததால், தபால் அலுவலக மேஜையின் மீது அதனை வைத்துள்ளார்.

பின்னர், சக ஊழியர்கள் அந்த பார்சலை உடைத்து பார்த்த போது, அதனுள் 15 சென்டி மீட்டர் நீளம் கொண்ட பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் பார்சலை பரிசோதித்தில் அனுப்பியவரின் விவரம் எதுவும் இல்லை. எனினும், பார்சலுக்குள் மிரட்டல் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது.

இந்நிலையில், அணிலா இதுதொடர்பாக பொலிஸில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. அப்படி இருக்க எதற்காக பார்சலில் பாம்பும், மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது என தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பார்சலில் இருந்த பாம்பு வன ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் பார்சல் அனுப்பியவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.