அனுப்பாமல் இருந்தால் என் மகளுக்கு இப்படி ஆயிருக்காதே : மகளை காப்பாற்றும் படி கதறும் தாய்!!

321


தமிழகத்தில் சாமி கும்பிடும்போது துப்பட்டா தீப்பிடித்து எரிந்ததால், சிறுமி ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த தெத்திகிரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி மகாலிங்கம்-புனிதா. இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், 6-ஆம் வகுப்பு படிக்கும் விஜயபாரதி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் விஜயபாரதி கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் சர்க்குலர் ஒன்றை கொடுத்து வேறு ஒரு இடத்தில் இருக்கும் பள்ளியில் கொடுத்துவிட்டு வரும் படி கூறியுள்ளார்.



இதனால் பள்ளியில் கொடுத்துவிட்டு திரும்பும் போது, அருகிலிருக்கும் கோவிலில் விஜயா சாமி கும்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக துப்பட்டா எரிந்ததால், பாதி உடல் தீக்காயம் அடைந்த நிலையில், தற்போது சேலத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது குறித்து விஜயாவின் அம்மாவான புனிதாவிடம் கேட்ட போது, அன்றைய தினம் என் மகள் குளித்துவிட்டு, அழகாக பள்ளிக்கு சென்றிருந்தாள். திடீரென்று காலை 10 மணிக்கு மேல் உன் மகள் தீப்பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள், அதனால் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்ற அதிர்ச்சி தகவல் வந்தது.


இதைக் கேட்டவுடன் என் உயிரே போயிருச்சு, கதறி அழுதவாறு மருத்துவமனைக்கு ஓடினோம். பள்ளியின் தலைமை ஆசிரியை குழந்தையம்மாள் என் மகளையும் கீர்த்திகா என்ற பெண்ணையும் அழைத்து சர்க்குலர் ஒன்றை கொடுத்து இன்னொரு இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். விஜயபாரதியும், கீர்த்திகாவும் கொடுத்துவிட்டு, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வரும் வழியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளனர்.

சாமி கும்பிடும்போது விளக்கில் இருந்த தீ துப்பட்டாவில் பிடித்திருக்கிறது. அது தெரியாமல் அவள் ஆழ்ந்து சாமி கும்பிட்டிருக்கிறார். பிறகு கீர்த்திகா பார்த்து அலறி இருக்கிறார்.


அதன் பிறகு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து தீயை அணைத்திருக்கிறார்கள். இதனால் அவளுக்கு ஒரு பகுதியே வெந்துவிட்டது. என் குழந்தையை தலைமை ஆசிரியர் வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆசிரியை பணம் கொடுப்பதாகச் சொல்லறாங்க. எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். என் குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்தால் போதும் என்று கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.