ஐசிசியின் ஊழல் தடுப்பு வழக்கு விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காத இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவிற்கு 14 நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஐசிசி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், தேர்வுக்குழு தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் 49 வயதான சனத் ஜெயசூர்யா.
ஐசிசியின் ஊழல் தடுப்பு குறியீட்டை இரண்டு முறை மீறியதாக சனத் ஜெயசூர்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊழல் தடுப்பு குற்றசாட்டு விசாரணையில் ஒத்துழைக்கத் தவறிய அல்லது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தல் மற்றும் விசாரணையை தடுத்தல் அல்லது தாமதப்படுத்துதல், எந்தவொரு ஆவணம் அல்லது தொடர்புடைய பிற தகவல்களையும் மூடிமறைத்தல், அல்லது அழித்தல் உள்ளிட்ட குறியீடுகளை மீறியதால் அக்டோபர் 15 முதல் அடுத்த 14 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.