மண்ணில் தோண்டி எடுக்கப்பட்ட 7 மாத பெண் குழந்தை : பிடிபட்ட தந்தையின் வாக்குமூலம்!!

222

தமிழகத்தில் 7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின்னர் நாடகமாடிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்ததாக கூறி புதைக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினமே, மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 6 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், குழந்தை கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் பொலிசில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று பொலிசார் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் உடற்கூறு ஆய்விற்காக திருச்சிக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மணிகண்டனின் மீது சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் குழந்தையை தானே கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர், மணிகண்டன் மீது கொலை மற்றும் கொலையை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.