வவுனியா நகரசபையில் வாகன கொள்வனவு தொடர்பில் சர்ச்சை!!

256

வாகன நகரசபைக்கு புதிய வாகனம் ஒன்று கொள்வனவு செய்ய வேண்டும் என தவிசாளர் இ.கௌதமன் அவர்கள் சபையில் கருத்து தெரிவித்தையடுத்து சபையில் நீண்ட விவாதம் ஏற்பட்டது.

வவுனியா நகரசபையின் இம் மாதத்திற்கான அமர்வு இன்று காலை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வவுனியா நகரசபையில் வாகனப் பற்றாக்குறை உள்ளதாகவும், தவிசாளர், உபதவிசாளர், செயலாளர் ஆகியோர் பாவிப்பதற்கு இரு வாகனங்கள் உள்ள போதும் அதில் ஒன்று அடிக்கடி பழுதடைவதால் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யலாம் சபையின் கவனத்திற்கு தவிசாளர் கொண்டு வந்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, சபை அமர்வு கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறித்த விடயம் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு தெரிவிக்காத விடயத்தை உடனடியாக கொண்டு வந்து தீர்மானமாக நிறைவேற்ற முடியாது எனவும் நகரசபையில் உள்ள வாகனங்களை திருத்தி பயன்படுத்த வேண்டும். மேலதிகமாக புதிய வாகனத்தை கொள்வனவு செய்து நிதியை வீண் விரயம் செய்ய முடியாது எனத் தெரிவித்தார். குறித்த கருத்தினை உறுப்பினர்களான ரி.கே.இராஜலிங்கம், க.சந்திரகுலசிங்கம் ஆகியோரும் வலியுறுத்தினர்.

இதன்போது புதிய வாகனம் கொள்வனவு செய்வது என சபையின் ஒருவர் முன்மொழிந்து ஒருவர் வழி மொழிய முற்பட்ட போது உறுப்பினர்கள் சிலர் இது ஏகமனதான முடிவு அல்ல என தெரிவித்தையடுத்து வாக்கெடுப்புக்கு செல்வதா என கலந்துரையாடப்பட்டது. இறுதியில் வாகனக் கொள்வனவு தொடர்பில் அடுத்த அமர்வில் விவாதித்து தீர்மானம் எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இதன்போது கடந்த 11 ஆம் திகதி தவிசாளர் குப்பை ஏற்றும் உழவு இயந்திரத்தில் பயணித்தமை அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு எனவும் உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது