வவுனியாவில் ஆவா குழு துண்டுப் பிரசுர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு பிணை!!

389

வவுனியாவில் ஆவா குழு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் (02.11.2018) கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரை பிணையில் செல்ல வவுனியா மாவட்ட நீதிமன்றம் இன்று (05.11) அனுமதி வழங்கியுள்ளது.

வவுனியாவில் இருந்து வெளிவருகின்ற தினப்புயல் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளராகிய இமானுவேல் தர்ஷன் என்பவரே பொலிசாரினால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுதலை செய்து வழக்கை ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

ஆவா குழுவின் பிரசுரம் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மற்றுமோர் இளைஞனை பார்வையிட வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் தன்னை கைது செய்த பொலிசார் தன்மீது ஆவா குழுவிற்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தடுத்து வைத்ததாக தர்சன் தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய ஊடகவியலாளர் சார்பில் சட்டத்தரணி தயாபரன் முன்னிலையாகியிருந்தார்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கும் நிலையில் பொலிசார் ஊடகவியலாளர் ஒருவரை எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்திருப்பதானது ஒரு அச்ச நிலையை உருவாக்கும் என்பதுடன் அச்சிடப்பட்ட ஒரு பிரதியை ஊடகவியலாளர் ஒருவர் வைத்திருந்தார் என்பதற்காக எவ்வாறு அவரை பொலிசார் கைது செய்ய முடியும் என மன்றில் கேள்வி எழுப்பினார்.

குறித்த ஊடகவியலாளரிடமிருந்து எத்தகைய துண்டுப் பிரசுரங்களையும் பொலிசார் கைப்பற்றியிருக்கவில்லை என சுட்டிக்காட்டிய தயாபரன், அத்தகைய பிரசுரம் தொடர்பாக எவராவது பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர்தான் வினியோகம் செய்தார் என்றோ அல்லது அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றோ முறைப்பாடுகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய சட்டத்தரணி தயாபரன், நீதிமன்றம் குறித்த ஊடகவியலாளருக்கு பிணை வழங்க வேண்டும் என கோரினார்.

இதனையடுத்து பொலிசார் தகுந்த ஆதாரங்கள் எதனையும் நீதிமன்றத்தில் முன்வைக்க முடியாத காரணத்தினால் மன்று ஊடகவியலாளர் தர்சனை ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.