வாயைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய கோஹ்லி : அதிருப்தியில் இந்திய கிரிக்கெட் வாரியம்!!

328

ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு விராட் கோஹ்லி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது இந்த செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ரசிகர் ஒருவருக்கு அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. அதாவது, ரசிகர் ஒருவர் தனக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை விட இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை காணவே பிடிக்கும் என கூறியிருந்தார்.

இதனைப் பார்த்த கோஹ்லி, அந்த ரசிகரை இந்தியாவில் வாழக் கூடாது என்றும், மற்ற நாடுகளை நேசித்தால் எதற்கு நம் நாட்டில் இருக்கிறாய்? வேறு நாட்டிற்கு சென்று ஏன் வாழக்கூடாது? உனக்கு எது முதன்மையானது என்பதை தேர்ந்தெடு என்று பதிலளித்தார்.

கோஹ்லியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் அவருக்கு எதிராக சரமாரியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோஹ்லி கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில், ‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன்.

அதோடு விவியன் ரிச்சட்ஸ், கிரீனிட்ஸ், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாஹ், பிரையன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராட் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், Puma போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப்பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோஹ்லி மீறியிருக்கிறார். விராட் சிறந்த வீரர், சிறந்த மனிதராகவும் மாற முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.