நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மதியம் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை பலம் இல்லாமல் ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. இது அடிப்படை ஜனநாயகம். ஆகவே தான் நாங்கள் 3 தினங்கள் அடுத்தடுத்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
இந்தத் தீர்மானம் முதலாவது தடவை நிறைவேற்றப்பட்டவுடனேயே ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
சிறுபிள்ளைகள் பந்து விளையாடும் போது ஒரு தடவை ‘அவுட்’டானால் ‘அவுட்’ இல்லை. 3 தடவைகள் ‘அவுட்’டானால் தான் ‘அவுட்’ என்ற மாதிரி 3 தடவைகள் மஹிந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிறைவேற்றிய போதிலும் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா என்று நாங்கள் பார்க்கத் தான் வேண்டும். இல்லாவிட்டால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்” என தெரிவித்துள்ளார்.
-தமிழ்வின்-