வவுனியா பூந்தோட்டத்தில் ஆறுமுகநாவலர் நினைவு தினம்!!

683

வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஞாபகார்த்த நினைவுத் தூபியில் இன்று (05.12.2018) காலை 9.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பினரால் நினைவுகூரப்பட்டது.

காணாமலாக்கப்பட்ட உறவுகளால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் தமிழருவி சிவகுமார் அவர்களின் சொற்பொழிவுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எனப்பலரும் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உடுபுடவைகள் தமிழ் விருட்சம் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.

ஆறுமுகநாவலரின் நினைவுத்தூபிக்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவாக நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.

இன் நிகழ்வின் போது தமிழ் விருட்சம் அமைப்பினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதினைந்து பேருக்கு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டன.