ஆண் காதலனுக்காக மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

380


 

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்



தன் பாலின காதலருடன் சேர்ந்து வாழ, மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி கணவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.





பிரித்தானியாவின் Middlesbrough பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவர் தனது பல்கலைக்கழக தோழியான ஜெசிகா படேலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் மருந்து கடை ஒன்றை 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த மே மாதம் 14ஆம் திகதி ஜெசிகா தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.


அதனைத் தொடர்ந்து, அவரது உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணையை தொடங்கினர். அப்போது மிடேஷ் படேல் தான் தனது மனைவியை கொன்றுள்ளார் என்பது தெரிய வந்தது.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனக்கும் இந்தக் கொலைக்கு சம்பந்தம் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால், வீட்டில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி கமெரா உதவியுடன் அவர் ஜெசிகாவை கொலை செய்தது உறுதியானது.

கொலைக்கான காரணம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. தன் ஆண் காதலருடன் சேர்ந்து வாழ்வதற்காகவே இந்த கொலை சம்பவத்தை மிடேஷ் அரங்கேற்றியுள்ளார். மேலும், ஜெசிகா இறந்து விட்டால் கிடைக்கும் காப்பீட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனது ஆண் காதலருடன் அவுஸ்திரேலியா செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.


அதன்படி, சம்பவத்தன்று ஜெசிகாவுக்கு அதிகப்படியான இன்சுலினை ஊசி மூலம் செலுத்திய மிடேஷ், பின்னர் அவரது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மிடேஷ் படேலுக்கு எதிரான ஆதரங்களை திரட்டிய பொலிசார், அதனை நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணையில் மிடேஷ் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை குறித்த விவரங்களை தள்ளி வைத்தது. இந்நிலையில், தற்போது மிடேஷ் படேலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.