வவுனியா நகரசபையில் பணியாற்றும் இருவருக்கு வங்கியில் வேலை பெற்றுத்தருவதாக பணமோசடி!!

370

வவுனியா நகரசபையின் தற்காலிகமாக பயிலுனராக பணியாற்றும் இருவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து அவர்கள் இருவரிடமிருந்தும் ஒரு தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்து வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரசபையில் கடந்த 6 மாதங்களாக தற்காலிகமாக பணியாற்றும் பயிலுனர் இருவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தனியார் வங்கி ஒன்றில் வேலைவாய்ப்புக்கள் இருக்கின்றன உங்களுக்குத் தகுதியிருந்தால் அந்த வேலைகளைப் பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை காட்டிப் பேசியுள்ளார்.

குறித்தநபர் பேசியதை நம்பிய இருவரும் வங்கி வேலைக்கு செல்வதற்கு முடிவு எடுத்துள்ளார்கள். அவர்களிடம் முற்பணமாக 5ஆயிரம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து இருவரும் 10ஆயிரம் ரூபாவினை வவுனியாவில் (ஈஸி காஷ்) செய்து பணத்தை செலுத்தியுள்ளனர். இதையடுத்து தொடர்புகொண்டு குறித்த நபர் மேலும் 10 ஆயிரம் ரூபா பணத்தை வைப்புச் செய்தால் திகதியை நிர்ணயிக்க முடியும் என்றும் உடனடியாக அத்தொகையைச் செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த இருவரும் மேலதிகமாக 10ஆயிரம் ரூபாவினைச் செலுத்தியுள்ளனர். இருவரும் மொத்தமாக 20ஆயிரம் ரூபா செலுத்திய நிலையில் குறித்த நபரின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சில தினங்களின் பின்னர் நிலைமைகளை நகரசபையின் உயர் அதிகாரி ஒருவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அவரின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் நிலையத்தில் முதற்கட்டமாக முறைப்பாடு மேற்கொள்வதற்கு சென்றபோது பொலிசார் இழுத்தடிப்பு செய்துள்ளதுடன் முறைப்பாட்டினையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு முறைப்பாடு நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.