கோடிக்கணக்கான பணத்தை தானம் செய்துவிட்டு எளிமையான வாழ்க்கை : வியக்கவைக்கும் தம்பதி!!

480

 

வியக்கவைக்கும் தம்பதி

தமிழகத்தை சேர்ந்த முதிய தம்பதி கோடிக்கணக்கான பணத்தை மக்களின் தொண்டுக்காக செலவிடும் நிலையில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மதுரை திருநகரைச் சேர்ந்த அந்த தம்பதிகளின் பெயர் ஜனார்த்தனன் – ஜலஜாவாகும். மத்திய அரசு ஊழியர்களாக இருந்த இவர்கள் தொண்டு செய்வதற்காகவே விருப்ப ஒய்வு பெற்றனர்.

ஒய்வு பெற்ற போது கிடைத்த பணத்தைக் கொண்டு திருநகரில் ஐந்து கிரவுண்டு இடத்தை வாங்கிப்போட்டனர். அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும். அதில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஜனார்தனனுக்கு திடீரென பார்வைக் கோளாறு ஏற்படவே தாம் முதியோர் இ்ல்லம் நடத்தமுடியாது நடத்துபவர்கள் யாருக்காவது இடத்தை கொடுத்துவிடலாம் என முடிவு செய்தனர்.

அந்த நேரத்தில் டாக்டர் பாலகுருசாமி உள்ளீட்ட சில இளம் டாக்டர்கள் ஒன்று சேர்ந்து ‛ஐஸ்வர்யம் அறக்கட்டளை’ என்ற அமைப்பினை துவங்கி ஆதரவில்லாமல் தெருவில் வீசப்பட்ட வயதானவர்களை காப்பாற்றி தகுந்த மருத்துவமும் உணவும் கொடுத்து காப்பாற்றி வந்தனர். ஆனால் போதுமான இடவசதி இல்லாமல் சிரமப்பட்டனர், இதனைக்கேள்விப்பட்ட ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினர் தங்களது இடத்தை தானமாக கொடுத்தனர்.

ஆனாலும் மருத்துவர்கள் குழு தானமாக இடத்தைப் பெற சிறு தயக்கம்காட்டினர், இடத்தை பதிவு செய்ய இரண்டரை லட்ச ரூபாய் தேவை என்பதுதான் அந்த தயக்கத்திற்கு காரணம். இதைக் கேள்விப்பட்ட தம்பதியினர் இடத்தை தானமாக கொடுத்ததுடன் நி்ற்காமல் தங்களது சேமி்ப்பில் இருந்த பணத்தை எடுத்து இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து இடத்தை பதிவும் செய்து கொடுத்தனர்.

இடம் கிடைத்துவிட்டது இனி இதில் கட்டிடம் கட்டவேண்டுமே என்ற நிலை வந்த போது மீண்டும் இதே தம்பதியினர் தங்களது வெளிநாட்டு உள்நாட்டு உறவுகள் நட்புகளிடம் விஷயத்தைச் சொன்னதும் நிதி வந்து சேர்ந்தது, இரண்டு மாடி கட்டிடமும் கட்டப்பட்டது. இவ்வளவு பணத்தையும் தானமாக கொடுத்துவிட்டு எங்காவது போகவேண்டும் என்றால் கூட டவுன் பஸ்சில்தான் இப்போதும் போய்வந்து கொண்டு இருக்கின்றனர்.

வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது தங்களது வேலைகளை தாங்களேதான் செய்து கொள்கின்றனர் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளை அழைத்து மாலை நேரங்களில் தங்களது அறிவை பகிர்ந்து கொண்டு இலவச ட்யூஷன் எடு்க்கின்றனர்.

இவர்களின் தயவால் இப்போது வாழ்வின் விளிம்பு நிலையில் மரணத்தின் வாசலில் இருப்பவர்கள் என்று யாருமே கவனிக்காமல் குப்பையாக வீசியெறியப்பட்ட ஆண்,பெண் முதியவர்கள் 39 பேர் ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் தங்கி கடைசி காலத்தை நிம்மதியாக கழித்துவருகின்றனர்.