வவுனியாவில் உணவகங்களில் பணியாற்றும் 6 நோயாளர்கள் கண்டுபிடிப்பு!!

844

வவுனியாவிலுள்ள உணவகங்களில், உணவு கையாளும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 6 பேருக்கு தொற்றை ஏற்படுத்த கூடிய நோய்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 11 சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலும் காணப்பட்ட உணவகங்களில் கடமையாற்றும், குறிப்பாக உணவு கையாளும் உழியர்கள் 382 பேருக்கு இவ்வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் வரை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உணவங்களில் கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.

இந்த மருத்துவ பரிசோதனையில் 3 பேருக்கு நெருப்பு காய்ச்சலும், 3 பேருக்கு காச நோயும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மீண்டும் அவர்கள் அதே உணவகங்களில் கடமையாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.