சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம்பிடித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்!!

728

 

 

சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழன்

தமிழகத்தைச் சேர்ந்த முஹமது நயீம் என்ற இளைஞர் சவுதி அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள கோபாலபட்டினம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர் முஹமது நயீம்.

இவரது பெற்றோர் தற்போது சவுதிஅரேபியாவில் வசித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பு முழுவதும் சவூதிஅரேபியாவில் பயின்ற முஹமது தற்போது திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொழில் இளங்கலை படித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் சவூதி அரேபியாவின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியில் தேர்வு பெற்றுள்ளார். இவர் தாய்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை முதல் தகுதிச்சுற்றில் விளையாடுகிறார்.

சவூதிஅரேபியா – தாய்லாந்திற்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து முஹமது நயீம் அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் சவூதி அரேபியா கிரிக்கெட் அணியில் தமிழகத்திலிருந்து பங்குபெறும் முதல் தமிழர் என்ற பெருமையை முஹமது நயீம் பெறுகிறார்.

இது குறித்து முஹமது நயீமின் தந்தை கூறுகையில், கிரிக்கெட் போட்டிகளை சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்தி அதன் மேம்பாட்டிற்காக உழைக்கும் அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போட்டிகளில் விளையாடும் வீரர்கள் வெற்றி பெற்று சவூதி அரேபியாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த தமிழக வீரர் ஒருவர் முதல் முறையாக சவுதி அரேபியா அணியில் இடம் பிடித்துள்ளதால், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.