வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் மதுபான நிலையம் சகல அனுமதியுடனுமே அமைக்கப்பட்டுள்ளது!!

414


 

மதுபான நிலையம்



வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மதுபான விற்பனை நிலையமானது மீள புதுப்பிக்கப்பட்டு கிராம சேவையாளர் உட்பட அனைவரின் அனுமதியுடனும் நகரசபை பொது சுகாதார பரிசோதகரின் பரிசோதனையின் பின்னரே திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வவுனியா உதவி மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.அசோக திலகரட்ன தெரிவித்துள்ளார்.





வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மதுபான விற்பனை நிலையம் தொடர்பாக அவரிடம் இன்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,


வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் கண்டி வீதியில் முதலாம் மாடியில் கடந்த 15 தொடக்கம் 20 வருடமாக இயங்கி வந்த மதுபான நிலையம் நிலையம் தற்போது மீள புதுப்பிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முதலாவது மாடிக்கு மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


மதுபான விற்பனை நிலையத்தினை அப்பகுதியில் அமைப்பதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வியாபார நிலையத்தின் உரிமையாளரின் சம்மத கடிதம், வியாபார நிலையத்தின் வரைபடம் வியாபார நிலையத்தின் ஒப்பந்த கடிதம், பொலிஸ் நிலையத்தின் கடிதம், நகரசபையின் அனுமதி, பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் அனைத்துக் கடிதங்களும் எமக்கு கிடைத்த பின்னரே நாங்கள் ஒரு குழுவினரை அப்பகுதிக்கு அனுப்பி எமது விசாரணைகளின் பின்னரே எமது அனுமதியை வழங்கி வருகின்றோம்.

எனவே இந்த மதுபான விற்பனை நிலையம் சட்ட விரோதமானதோ அல்லது சட்டத்திற்கு எதிராகவோ அனுமதியளிக்கப்படவில்லை. தற்போது சிலரிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனவே இதனையும் எமது குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒரு மதுபான நிலையம் அமைப்பதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விடயத்தில் எவ்வித சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கவில்லை. இப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து மது அருந்தினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.