8 பேருக்கு உயிர் கொடுத்து தன்னுயிரை விட்ட இளைஞன் : மனதை உருக்கும் சம்பவம்!!

306

 

மனதை உருக்கும் சம்பவம்

மதுப்பழக்கமே இல்லாத இளைஞர் ஒருவரின் உயிரை மதுவே பறித்த துயரச் சம்பவம் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருக்கும் பழனிக்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

திருமணமாகாத இவர் தமது தந்தையின் மறைவுக்கு பின்னர் தாயாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி தனது நண்பருடன் பழனிக்குமார் மோட்டார் சைக்களில் சென்றபோது, எதிரே 3 நபர்களுடன் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியுள்ளது.

அந்த மோட்டார் சைக்களில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி வாகனத்தை ஓட்டியவர் செல்போனில் பேசியபடியே வந்துள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பழனிக்குமார் சென்ற வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பழனிக்குமார் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மருத்துவர்கள் தெரிவித்த இந்தத் தகவலால் கதறித் துடித்த பழனிக்குமாரின் தாயார் தமது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க சம்மதித்துள்ளார்.

பழனிக்குமாரின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை தானம் பெறப்பட்டன. தானம் பெறப்பட்ட உடலுறுப்புகள் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது.

தற்போது பழனிக்குமாரின் உடல் உறுப்புகளால் 8 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். கணவரையும் இழந்து தனக்கு ஆதரவாக இருந்த ஒரே மகனையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் 65 வயதான தாயாரின் இந்த முடிவு அப்பகுதி மக்களை நெகிழ வைத்துள்ளது.