2 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றிலிருந்து வெளியில் எடுத்த நபர் : அதிரவைத்த சம்பவம்!!

434

மலைபாம்பு வயிற்றை மிதித்து உள்ளே இருந்து கோழியை வெளியே எடுத்த வனத்துறை ஊழியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் வனத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள மாநிலத்தின் கட்டாஞ்சல் என்ற இடத்தில் கடந்த ஜூன் மாதம் வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு இரு கோழிகளை விழுங்கியது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில், பகுதி நேர ஊழியரான முகமது என்ற பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்துக்கு வந்து மலைப்பாம்பைப் பிடித்தார்.

அப்போது, மலைப்பாம்பின் வயிற்றை மிதித்து உள்ளேயிருந்த இரு கோழிகளையும் வெளியே கக்க வைத்தார்.

இரு கோழிகளும் இறந்த நிலையில் பாம்பின் வயிற்றில் இருந்து வெளியே விழுந்தன. பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

முகமது பாம்பின் வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுக்கும் வீடியோ வைரலானது.

இதைத் தொடர்ந்து வனவிலங்கு ஆர்வலர் ஏஞ்சல் நாயர் என்பவர் பாம்பை கொடுமைப்படுத்தியாக முகமது மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள வனத்துறைக்குப் புகார் அளித்தார்.

ஆனால் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்றத்தில் ஏஞ்சல் நாயர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாம்பைக் கொடுமைப்படுத்திய முகமது மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள வனத்துறைக்குக் கேள்வி எழுப்பியதோடு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.