யாழ் பல்கலைக்கழ மாணவர்களின் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஆதரவு!!

389


 

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிபடுத்தகோரியும், மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 16ம் திகதி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஒத்துழைப்பை கோரும் கலந்துரையாடல் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வாடி வீடு மண்டபத்தில் நேற்று (12.03.2019) மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது.



குறித்த கலந்துரையாடலில் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பொது அமைப்புகள், அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அக வணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் பல்வேறு குழுக்களாக பிரிந்துசெயற்படுகின்றமை, மற்றும் தன்னிச்சையாக செயற்படுகின்றமை தொடர்பாகவும், அவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன் போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவினை வழங்கவேண்டும் என்று பல்கலைகழக மாணவர்களால் கோரப்பட்டிருந்தது.



இந்நிலையில் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த வவுனியா வர்த்தகர்சங்கம், வவுனியா வரியிறுப்பாளர்சங்கம் ஆகியன குறித்த போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இப் போராட்டத்திற்கு வவுனியாவிலிருந்து போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.