பூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!!

276

4 பேர் சடலமாக மீட்பு

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் குர்நூல் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரன் ஜானியுலு (28). இவர் தனது மனைவி வசந்தா (25), மகள் ராம லட்சுமி (7), மகன் ராஜேஷ் (5) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று முழுவதும் இவர்களுடைய வீடு திறக்கப்படாமல் உள்தாழ்ப்பால் போடப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார். அப்போது 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நபர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், வீரன் ஜானியுலுவின் தினசரி வருமானத்தில் தான் குடும்பம் நடந்துள்ளது. மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் கடந்த சில நாட்களாகவே கணவன், மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் எந்த காரணத்திற்கான தற்கொலை செய்துகொண்டனர் என்பது தெரியவில்லை. முதலில் குழந்தைகளை தூக்கில் மாட்டிய பின்னர் தான் தம்பதியினர் தற்கொலை செய்திருக்க வேண்டும். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.