தலை வேறு உடல் வேறாக வந்த குழந்தை : இடுக்கி வைத்து பிரசவத்தில் குழந்தையின் தலையை இழுத்த செவிலியர்!!

384


இந்தியாவில் பிரசவத்தின்போது மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தைகள் உயிரிழந்துபோவது தொடர்கதையாக நடந்து வருகிறது.



ராஜஸ்தான் மாநிலத்தில் போதையில் செவிலியர் ஒருவர் பிரசவம் பார்த்த காரணத்தால் தலை வேறு, உடல் வேறாக குந்தை வெளியே வந்த சம்பவம் நடந்தது. தற்போது, அதே போன்று ஒரு சம்பவம் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.





கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொம்மி என்ற நிறைமாத கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவ வலி அதிகரித்த நிலையில், இரவுப் பணி மருத்துவர் இல்லாததால் செவிலியர் முத்துக்குமாரியே பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது.


போதிய பயிற்சி இல்லாத செவிலியர் என்பதால் குழந்தைப் பிறப்பின்போது குழந்தையின் தலையில் இடுக்கி வைத்து எடுத்துள்ளார். அதிக அழுத்தம் கொடுத்து தலையை எடுத்ததில் குழந்தையின் தலை மட்டும் தனியாக வெளியே வந்தது. பின்னர் ஆபத்தை உணர்ந்த செவிலியர் அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பொம்மியை அனுப்பி வைத்துள்ளார்.


அங்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொம்மி சிகிச்சை பெற்று வருகிறார். செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதால் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது, தாயின் வயிற்றில் இறந்த நிலையில் சிசு 2 நாட்கள் இருந்துள்ளது. அதுவே தலை துண்டானதற்கு காரணமாகும். குழந்தையின் எடை 1.5 கிலோவாக மட்டுமே இருந்தது. குழந்தையின் தலை துண்டான விவகாரம் குறித்து விசாரணை நடத்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியின் மகப்பேறு தலைமை மருத்துவர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.