வவுனியா, மூனாமடு நாகபூசணி அம்மன் ஆலயக் காணியை அபகரித்து பௌத்த மதத்தலம் அமைக்க முயற்சிக்கப்படுகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
முனாமடு மற்றும் பேயாடிக்கூழாங்குளம் ஆகிய இடங்களில் தமிழ் மக்கள் தொன்றுதொட்டு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தமது வயல் நிலங்களுக்கு அருகே ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்ததுடன், இளைப்பாறுமிடம் என்பவற்றையும் அமைத்திருந்தனர்.
மூனாமடுவில் அமைந்திருந்த நாகபூசணி அம்மன் ஆலயம் நீண்டகாலமாக தமிழ் மக்களால் பேணப்பட்டு வந்தது.
1995ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அந்தப் பகுதியை இலங்கை இராணுவம் கையகப்படுத்தியது. அவர்களால் அமைக்கப்பட்ட முகாமில் வழிபாட்டுக்காக புத்தர் சிலை ஒன்றையும் அவர்கள் நிறுவியிருந்தனர்.
பின்னர் அந்தக் காணிகள் மக்கள் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டபோதும், அங்கு நிறுவப்பட்ட புத்தர் சிலை அகற்றப்படவில்லை. தற்போது வவுனியாவில் உள்ள பிக்கு ஒருவர் அந்தப் பகுதியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், அந்தக் காணி இந்து ஆலயம் அமைந்துள்ள பகுதி. அந்தக் காணி நாகபூசணி அம்மன் ஆலயக் காணி என்று பிரதேச செயலகமும் கூறியுள்ளது. அதற்கான ஆதாரங்களும் உள்ளன. அதை வேறு எவரும் உரிமை கோரவோ, கையகப்படுத்தவோ அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது.
வடக்கில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள காணிகளில் பெரும்பாலானவை தனியார் காணிகளே. புத்தர் சிலையை அனைத்து இடங்களிலும் நிறுவி அந்த இடங்களைச் சொந்தம் கொண்டாட நினைப்பது நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும். புத்த பெருமானின் போதனைகளை ஏற்று நடக்கும் எவரும் இவ்வாறான காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.
அந்த இடத்தில் நிறுவப்பட்ட புத்தர் சிலையை அகற்றி, தமிழ் மக்கள் பூர்வீகமாக மேற்கொண்டுவரும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 21ஆம் திகதி வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
-உதயன்-