ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் : ஆச்சர்யமான வீடியோவை வெளியிட்ட தம்பதியினர்!!

640

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினர் ஒரே பிரசவத்தில் தங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்த வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்தின் சேஷையர் பகுதியை சேர்ந்த வில் அவிரி (33) – ஜெசிகா வாட்ஸ் (29) என்கிற தம்பதியினர் தங்கள் 3 குழந்தைகளான சோனி, சிட்னி மற்றும் பெட்ச்சி ஆகியோரின் முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடினர்.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக, குழந்தைகள் பிறந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோவினை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து ஜெசிகா கூறுகையில், எனக்கு 4 வயதில் பில்லி என்கிற மகன் இருக்கிறான். நான் 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது, மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்க்க சென்றோம். பில்லுக்கு ஒரு தங்கை அல்லது ஒரு சகோதரன் கிடைப்பான் என்று தான் நாங்கள் நினைத்தோம்.

ஆனால் உள்ளே மூன்று குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது எங்களுக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது. உள்ளே இருப்பது நிச்சயம் மூன்று ஆண் குழந்தைகளாக இருக்கலாம் என நினைத்து ஆடைகளையும் வாங்கிவிட்டேன். மீண்டும் ஒருமுறை சென்று ஸ்கேன் செய்து பார்த்தேன்.

அப்பொழுது உள்ளே ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அறுவை சிகிச்சை மூலம் மூன்று குழந்தைகளும் பிறந்தன.

அதனை பார்த்த என்னுடைய கணவர், மூன்று பேருமே அழகாக இருக்கிறார்கள் என பெரும் மகிழ்ச்சியடைந்தார். எங்களுக்கு நடந்த நம்ப முடியாத ஒரு ஆச்சர்ய சம்பவம் அது. அன்றிலிருந்து எங்களுடைய குடும்பத்தில் அன்பும், சிரிப்பும் அதிகரித்துள்ளது. அவர்கள் இந்த உலகத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவினை தற்போது மீண்டும் பார்ப்பது உணர்ச்சிகளை தூண்டுகிறது என தெரிவித்துள்ளார்.