வவுனியாவில் தொடர்ந்தும் நீண்டநேர மின்வெட்டு : பொதுமக்கள், வர்த்தகர்கள் விசனம்!!

329

மின்வெட்டு

வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்தும் பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேரம் வரை மின்வெட்டு காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக குறித்த மின்வெட்டு காணப்படுவதனால் மக்களும், வர்த்தகர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். நீண்ட நேர மின்வெட்டு காரணமாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவரும் நிலையில், இவ்வாறான மின்வெட்டு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் பெரும் சிரமங்களை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

இதேவேளை குளிர்சாதன பெட்டிகளை நம்பி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களும் குறித்த மின்வெட்டினால் தாம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் 4 மணிநேரம் வரை தொடர்ச்சியாக மின்வெட்டு காணப்படுவதனால் சிலை அலங்கரிப்பு நிலையங்கள், தையல் நிலையங்கள் என பல்வேறு தொழில்சார் பாதிப்புக்களும் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மின்வெட்டு நடைமுறையில் உள்ள நிலையில் தமது உள்ளுர் உற்பத்திகள் சிலவற்றை பாதுகாக்கவும், உற்பத்தி மேற்கொள்வதிலும் பெரும் சவால் நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படுவதில்லை எனவும் மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், தடையற்ற மின்சார வினியோகத்தை இலங்கை மின்சார சபையினர் முன்னேடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.