கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கூறிய கணவர் : நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை!!

311

வெட்டிக்கொலை

திருச்சியில் கர்ப்பிணி மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த முன்னாள் கணவன், பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சேர்ந்த சதீஷ்குமார் (24) கடந்த 2017ம் ஆண்டு அனிதா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போது கணவன் – மனைவிக்கு இடையில் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால், அனிதா தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிதாவிற்கு அவருடைய பெற்றோர் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்தனர். அனிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதற்கிடையில் அனிதாவிற்கும், சதீஷிற்கும் இடையில் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. செல்போனில் பேச ஆரம்பித்த இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளனர்.

நேற்றைக்கு முன்தினம் கோவில்பட்டிக்கு சென்ற சதீஷ், அனிதாவை தன்னுடன் மதுரைக்கு அழைத்து வந்துவிட்டார். இந்த சம்பவம் அறிந்த அனிதாவின் பெற்றோர் மதுரைக்கு விரைந்து, மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.

ஆனால் சதீஷ் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து சதீஷ் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் இரண்டு குடும்பத்தையும் அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்பிறகு சதீஷ் மட்டும் தனியாக பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர், திடீரென சுற்றிவளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களால் சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து வந்த பொலிஸார் சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் அனிதாவின் சகோதரன் செந்தில்குமாருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.