ஆணாக வந்த பெண்ணின் சடலம்
சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணி பெண்ணாக சேவை செய்த நிலையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் ஒன்று மாறி சென்ற செய்தி வெளியாகியிருந்தது. இந்திய நாட்டவர் ஒருவரது சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை பெண்ணின் சடலம் குறித்த இந்தியர் வீட்டிற்கு சென்றுள்ளது.
இலங்கைக்கு வந்த இளைஞனின் சடலத்தை மருத்துவர்கள் சோதனையிடும் போதே அடையாளம் காணப்பட்டுள்ளது. மாவநெல்ல மாலியத்த பிரதேசத்தில் பண்டார மெனிக்கே என்ற பெண் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து அவர் இலங்கைக்கு வராத போதிலும் குடும்பத்தினருடன் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 12ஆம் திகதி பண்டார மெனிக்கேவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி தனது நோய்த்தன்மை தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் 15ஆம் திகதி பண்டார மெனிக்கே உயிரிழந்துவிட்டதாக வேறு ஒருவர் தொலைபேசி ஊடாக அவரது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர். அத்துடன் சடலத்தை அனுப்பி வைப்பதாகவும், அதனை ஏற்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தருமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய சென்ற குடும்பத்தினர் இந்திய இளைஞனின் சடலத்தை பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் பண்டார மெனிக்கேவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.