அத்தை வீட்டிற்கு செல்வதாக சென்ற 20 வயது இளம் பெண் மாயம் : கண்டுபிடிக்க முடியாமல் திணறும் பொலிசார்!!

376

இளம் பெண் மாயம்

இந்தியாவில் மாணவி ஒருவர் மாயமாகி ஒருவருடம் ஆகியும் துப்பு கிடைக்காததால், பொலீசார் தவித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுத் தாராவைச் சேர்ந்தவர், ஜெஸ்னா மரியா ஜேம்ஸ் (20). இவர் கஞ்சிரப்பள்ளியில் உள்ள எஸ்.டி.கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.

இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி தனது அத்தை வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

முதலில், ஆட்டோ ஒன்றில் வெச்சூசிரா பேருந்து நிலையத்துக்குச் சென்ற அவர், எருமேலி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அங்கிருந்து முன்டக்கயம் என்ற ஊருக்குப் பேருந்தைப் பிடித்துள்ளார். முன்டக்கயம் வந்த ஜெஸ்னா, திடீரென மாயமானார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவரைப் பற்றிய தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஜெஸ்னா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜெஸ்னா, ஒருவேளை கொல்லப்பட்டிருக்கலாம் என கருதி காவல்துறையினர் அவர் உடலை எருமேலி, முன்டக்கயம், பீர்மேடு மற்றும் குட்டிக் கனம் ஆகிய வனப்பகுதிகளில் தீவிரமாக தேடினர். அப்போது எருமேலியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதித்த காவல்துறையினர், ஜெஸ்னா பேருந்தில் இருந்து இறங்கி முன்டக்கயம் செல்லும் பேருந்தில் ஏறுவதையும் செல்லும் வழியில் அவர் பேருந்தில் அமர்ந்திருப்பதையும் கண்டுபிடித்தனர்.

பின்னர் பல நாள் விசாரணைக்குப் பிறகு முன்டக்கயம் பகுதியில் கிடைத்த ஒரு சிசிடிவி கேமரா காட்சியில் ஜெஸ்னா பதிவாகியுள்ளார். அதில் கை மற்றும் தோளில் ஒவ்வொரு பையுடன் ஜெஸ்னா ஒரு கடைக்குள் செல்கிறார். அந்தக் காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

பின்னர் 6 நிமிடங்களுக்கு பின் ஜெஸ்னாவின் ஆண் நண்பர் ஒருவர் அந்தக் கடைக்குள் செல்கிறார். ஏற்கனவே காவல்துறையினரின் விசாரணையில், ஜெஸ்னா காணாமல் போன கடைசி நேரங்களில் இந்த ஆண் நண்பருக்கு அதிக போன் கால் செய்ததும், மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்தது.

ஆனால் அந்தக் கடைக்குள் இருந்து அவர்கள் இருவரும் வெளியே வரும் காட்சிகள் இல்லை. இதனால் அந்த நபர் மீது சந்தேகம் கொண்டு, காவல்துறையினர் விசாரித்து வந்தனர். ஜெஸ்னா காணாமல் போன அன்று முன்டக்கயம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள துணி கடையில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கண்காணித்தனர். அதில் சிவப்பு நிற கார் ஒன்று தெரிகிறது. அதில் ஜெஸ்னாவுடன் இன்னும் இரண்டு பேர் நிற்கின்றனர். அதில் ஒரு பெண், ஜெஸ்னா போலவே இருந்ததால் பொலீசார் இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.

இருந்தும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாணவி மாயமாகி ஒரு வருடம் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காததால் பொலிசார் தவித்து வருகின்றனர். இதனால் ஜெஸ்னாவின் சகோதரர் சிபிஐ விசாரணை கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.