வறட்சியிலும் வற்றாத நீரூற்று : இயற்கையின் அதிசயம்!!

716

இயற்கையின் அதிசயம்

கடும் வறட்சியான காலநிலை ஏற்பட்டாலும் வற்றாத நீரூற்று ஒன்று மாத்தறை மாவட்டம் அக்குரெஸ்ஸ தலஹகம, அளுகெட்டிய என்ற பகுதியில் அமைந்துள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் பெரிய நீர் குமிழி இருந்துள்ளது. அந்த இடம் மக்களை உயிர் பலியெடுக்கும் இடம் என்ற பீதி மக்களுக்கு இருந்துள்ளது.

இதனால், யானைகளை பயன்படுத்தி, பெரிய மரக்கட்டைகளை போட்டு அதனை மூடியுள்ளனர். இதனையடுத்து சில இடங்களில் நீரூற்றுகள் தோன்றியதாக முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தலஹகம கிழக்கு கமத்தொழில் அமைப்பு, கொங்கீரீட் வலயங்களை பயன்படுத்தி நீரூற்றுள்ள இடத்தை அபிவிருத்தி செய்துள்ளது.

பிரதேசத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலையில், தலஹகம மற்றும் அதனை சூழவுள்ள உக்கஸ்ஹேன, கம்பி அடிய, வில்பிட்ட போன்ற கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்த நீரூற்று பேருதவியாக அமைந்துள்ளது.

கடற்கரையில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீரூற்றில் ஊற்றெடுக்கும் தண்ணீர் சற்று உவர் தன்மை கொண்டது எனவும் இந்த நீரூற்றுக்கும் கடலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என நம்பபடுகிறது.

சில நேரங்களில் இந்த நீரூற்றின் ஊடாக சிப்பிகளும் வெளி வருவதாகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஏற்பட்ட போது, நீரூற்றில் சேறுடன் கூடிய தண்ணீர் வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.