வவுனியாவில் காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது : பெக்கோ இயந்திரமும் மீட்பு!!

786

மூவர் பொலிசாரால் கைது

வவுனியா, புளியங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிக்க பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இன்று புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, புளியங்குளம், பழையவாடிப் பகுதியில் உள்ள பெருங்காட்டினை சிலர் பெக்கோ இயந்திரம் மூலம் அழித்து வருவதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி வி.எஸ்.டீ.விதானகே, எஸ்.ஐ.ரணசிங்க, பொலிஸ் கான்ஸ்ரபிள்களான ஜெயசூரிய மற்றும் யூட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு சுமார் அரை ஏக்கர் காடு அழிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் காடு அழிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து காடழிப்பில் ஈடுபட்ட 50, 40 மற்றும் 34 வயதுடைய மூவரை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் காட்டினை அழிப்பதற்கு பயன்படுத்திய பெக்கோ இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.

குறித்த காடழிப்பானது உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள புளியங்குளம் பொலிசார், கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.