உணவு சாப்பிட தாமதமாக சென்றதால் இலங்கை குண்டுவெடிப்பில் பிழைத்த லண்டன் பேராசிரியர்!!

273

கிரன் அரசரட்னம்

இலங்கையின் Shangri-La ஹொட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் லண்டன் பேராசிரியர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இலங்கையில் 8 இடங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் லண்டனில் உள்ள Imperial College Business School-ல் பேராசிரியராக பணிபுரியும் கிரன் அரசரட்னம் (41) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

அதாவது, இலங்கையில் சமூக நிறுவனம் ஒன்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்காக கிரன் லண்டனில் இருந்து வந்துள்ளார். அவர் Shangri-La ஹொட்டலில் தங்கியிருந்த நிலையில் காலை உணவு சாப்பிடும் இடத்தில் குண்டு வெடித்தது.

அப்போது உணவு சாப்பிட அவர் தாமதமாக கிளம்பியதால் உயிர் தப்பித்தார். இது குறித்து கிரன் மிரட்சியுடன் கூறுகையில், நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக பிரித்தானியாவுக்கு சென்றேன்.

நான் Shangri-La ஹொட்டலின் 18வது மாடியில் இருந்து கீழே காலை உணவு சாப்பிட என் அறையை விட்டு வெளியில் வந்தேன்.

அப்போது என் மனதின் கவனம் வேறு எங்கோ சென்றது, பின்னர் மீண்டும் அறைக்குள் சென்று என் டெபிட் கார்டை எடுத்து வந்தேன், அப்போது தான் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. பின்னர் வெளியில் வந்து பார்த்த போது ஆங்காங்கே ரத்தங்கள் சிதறி கிடந்தன, பலரும் பதறியடித்து அங்குமிங்கும் ஓடினார்கள்.

பின்னர் அவசர வழியாக வெளியில் சென்றேன், நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து லண்டன் சென்றேன். இப்படியொரு காட்சியை இலங்கையில் மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவில்லை என கூறியுள்ளார்.