வவுனியாவில் வெடிகுண்டு மிரட்டல் : வவுனியா முழுவதும் கடும் பாதுகாப்பு : அச்சத்தில் மக்கள்!!

503


வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு இன்றையதினம் வெடிகுண்டு வெடிக்குமென மிரட்டல் விடுக்கப்பட்டதினையடுத்து இன்று (13.05.2019) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊழியர்களினது வாகனங்களும் வைத்தியசாலை வளாகத்தினுள் எடுத்துச்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் வாகன தரிப்பிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.



அத்துடன் வவுனியாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகமிகக் குறைவாக காணப்பட்டதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மேலும் பழைய பேரூந்து நிலையத்தினுள் வாகனங்கள் உட்செல்வதற்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா மன்னார் வீதி, வைத்தியசாலை வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, புகையிரத நிலைய வீதி போன்ற பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உட்செல்லும் வெளிச்செல்லும் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.



குண்டு வெடிக்கும் என்ற எச்சரிக்கைக் கடிதத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வவுனியா நகரமே அச்சத்தின் மத்தியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.