இலங்கை தமிழ் சகோதரர்கள்
அகதிகள் அந்தஸ்தை பெற தகுதி இல்லை எனக் கூறி இலங்கை தமிழ் இளைஞர்கள் இருவரை நாடுகடத்தும் முடிவுக்கு சுவிஸ் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர் இலங்கை தமிழ் சகோதரர்களான ஜெலக்சன் (18) மற்றும் ஜெசிபன் (17).
கடும் உழைப்பாளிகளும் திறமைசாலிகளுமான இருவருக்கும் தற்போது அகதிகள் அந்தஸ்தை வழங்க முடியாது என சுவிட்சர்லாந்தின் இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் உறுதிபட தெரிவித்துள்ளது. மட்டுமின்றி கடந்த பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தின் மத்திய நிர்வாக நீதிமன்றம் இந்த விவகாரத்தை உறுதியும் செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் தாங்கள் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உணவர்வதாக ஜெலக்சன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் பட்டப்படிப்பை முடித்த ஜெலக்சன் தற்போது பாடசாலை ஒன்றில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது சகோதரர் ஜெசிபன் கால்பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதால் கால்பந்து அணி ஒன்றில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
தற்போது சகோதரர்கள் இருவரும் நாடுகடத்தப்படும் ஆபத்தில் இருப்பதால் இருவரும் மனமுடைந்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
சுவிஸில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தரமான கல்வி என்பது இலங்கையில் வாய்ப்பே இல்லை என கூறும் ஜெலக்சன், இலங்கை சென்று என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் குழப்பமாகவே உள்ளது என்கிறார்.
மட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது மட்டுமின்றி, தீவிரவாதம் என்றாலே பயமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் ஜெலக்சன்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தாயாரின் கடுமையான முயற்சியால் சகோதரர்கள் இருவரும் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்ததாக கூறும் ஜெலக்சனின் உறவினர் ஷார்மி ரவி,
ஜெலக்சனின் தந்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதால் ராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தலை அளித்து வந்தது என்றார்.
தற்போதைய சூழலில் ஜெலக்சனும் சகோதரரும் இலங்கை சென்றால், கண்டிப்பாக ராணுவத்தின் கையில் சிக்க வாய்ப்புள்ளது எனவும் ஷார்மி ரவி அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இளம் வயதில் இலங்கை சென்று புதிதாக ஒரு வாழ்க்கை முன்னெடுப்பது என்பது கடினமான விடயம் எனவும் ஷார்மி ரவி தெரிவித்துள்ளார்.
சகோதரர்கள் இருவரையும் நாடுகடத்தும் முடிவுக்கு சுவிட்சர்லாந்தின் மத்திய நிர்வாக நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதை கடுமையாக விமர்சித்த Urs Hofer என்ற ஆசிரியர்,
இருவரும் திறமைசாலிகள் எனவும் தொழில் ரீதியாக சுவிட்சர்லாந்தில் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கையில் தற்போதுள்ள சூழலை குறிப்பிட்டு மீண்டும் புகலிடம் கோரி விண்ணப்பம் வழங்க சட்ட நிபுணர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.