சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம் : பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!!

339

பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலுமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து சமூக வலைதளங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று மாலை முதல் அந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக அமைதியை பேணுவதற்கு உதவிய பலர் உள்ளனர்.

அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இதேவேளை அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தொடர் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆகவே, இத்தகைய வன்முறையை தூண்டும் வகையிலாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்கள் தொடர்பில் முதலில் கண்டறியப்பட்டவுள்ளது.

பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பின்னதாக அவ்வாறன பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வோர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவித்தார்.