பூட்டிய வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : கோர சம்பவம்!!

265

4 பேர் சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த சுப்பிரமணியன் (52) என்பவர் சாலையில் பிஸ்கட், சிகரெட் என மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றினை நடத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் கட்டிய 2 மாடி வீட்டில் தாயார் ருக்மணி (72), மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20) ஆகியோருடன் வசித்து வந்தார். வழக்கமாக காலை நேரத்திலே வியாபாரத்திற்கு சென்று கடையை திறக்கும் சுப்பிரமணி, இன்று நீண்ட நேரமாகியும் கடையை திறக்காமல் இருந்துள்ளார்.

இதனால் ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டின் வெளிப்புற கேட் பூட்டப்பட்டிருந்தது. காலிங் பெல்லை நீண்டநேரம் அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அருகாமையில் இருந்த ஹேமாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்து வந்த ஹேமாவின் உறவினர்கள் சுவர் ஏறிக்குதித்து இடதுபக்க ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் சென்றனர்.

அப்போது வீட்டு மேல்மாடியில் உள்ள படுக்கை அறையில் சுப்ரமணி, மனைவி ஹேமா, தாயாரருக்மணி, மகள் ஷிவானி ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கிடந்த குளிர்சாதன பாட்டிலையும் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், தொழில் முன்னேற்றத்திற்காக சுப்பிரமணி கந்துவட்டிக்கு அதிக கடன் வாங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. பணம் கொடுத்தவர்கள் அதிக நெருக்கடி கொடுத்தாலே தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என உறவினர்கள் கூறியுள்ளனர்.