வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர் ஊருக்கு வந்து மகளுக்கு நடத்திய திருமணம் : குவியும் பாராட்டு.. ஏன் தெரியுமா?

353

குவியும் பாராட்டு..

ஜேர்மனியில் பணிபுரியும் தமிழர் ஒருவர் தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் முத்துசேகர். இவர் ஜேர்மனியில் ஊர்ந்து நகரக்கூடிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முத்துசேகரின் மகள் திருமண நிகழ்ச்சி காரைக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் அங்கு கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்து அவர் அசத்தியிருக்கிறார்.

அவர் கூறுகையில், திருமண மண்டபங்களில் கொட்டப்படும் சாப்பாடுக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு தீர்வு அளிக்கும் விதமாகவே கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் இயந்திரத்தை வைத்தேன்.

ஜேர்மனியில் திருமணம் மண்டபங்கள் மட்டுமல்லாது பெரிய உணவகம், அடுக்குமாடிக்குடியிருப்பு போன்ற இடங்களில் தேங்கும் கழிவுகளை அதற்கான இயந்திரத்தில் போட்டு உரமாக மாற்றுகிறார்கள்.

அதாவது 100-ல் இருந்து 500 கிலோ கழிவுகள் இந்த இயந்திரத்தில் போட்டால் கழிவுகளின் மொத்த எடையிலிருந்து ஐம்பது சதவீதம் நமக்கு உரமாக மாற்றித் தருகிறது இந்த உரம் தென்னை, மா, பலா போன்ற மரங்களுக்கும் செடிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். கல்யாண மண்டபங்கள் இதுபோன்ற இயந்திரங்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களிடம் இதற்கான குறைந்த கட்டணத்தை மண்டபங்கள் வசூல் செய்வதோடு இதிலிருந்து கிடைக்கும் உரத்தையும் நல்ல விலைக்குக் கொள்முதல் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார்.